ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை உடன் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து நாடு ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதால் தேர்தலைப் பிற்போட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலைப் பிற்போடுவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு இறுதி நிமிடம் வரை காத்திருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்காக அனைத்து வேட்பாளர்களும் ஏற்கனவே பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளனர். இறுதி நேரத்தில் தேர்தலைப் பிற்போட்டால் அவர்கள் செலவிட்ட பணம் வீணாகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் நிச்சயமாக பொருளாதாரத்தை அழித்துவிடும் என்பதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.